Blogger இயக்குவது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பெண்கள் விரைவில் பருவமடைய என்ன காரணம்?

பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.


பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதந்தோரும் 28 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.

பொதுவாக முன் காலத்தில் பெண்களின் பருவமடையும் வயதானது, 13 முதல் 16 ஆக இருந்தது.

ஆனால் இன்றைய காலத்துப் பெண்கள் குழந்தைகள் வயதான 8 முதல் 9 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள்.

பெண்கள் பருவமடைவதை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது, கிராமப்புற பெண்களை விட நகர்ப்புற பெண்கள் தான் சிறிய வயதிலேயே பருவமடைவதாக கூறுகின்றனர்.
அதற்கு காரணம் அவர்களின் உணவுப் பழக்க வழக்கம் தான் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெண் குழந்தைகளின் மார்பக வளர்ச்சி மற்றும் உடல் பகுதிகளில் வளரும் முடி ஆகியவற்றை வைத்து அந்த குழந்தை விரைவில் பருவமடைய போகிறாள் என்பதை நிர்ணயிக்க முடியும்.

இவ்வாறு குறைந்த வயதில் பருவமடைவதை Precocious Puberty என்று கூறுகின்றனர்.

குறைந்த வயதில் பருவம் அடைவதற்கான காரணங்கள்


  • சிறுவயதில் அதிக உடல்பருமனை கொண்டிருத்தல்.
  • கோழி இறைச்சி போன்ற அசைவ சாப்பாட்டை அதிகமாக சாப்பிடுவது.
  • மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் Bisphenol A (BPA) செய்த சத்துகள் குறைந்த உணவுகளை சாப்பிடுவது.
  • சிறுவயதில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகுவது.
  • வாழ்வியல் முறை, சுற்றுப்புற தூய்மை கேடு, உணவு முறைகளில் மாற்றம் போன்றவை இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.


குறைந்த வயதில் பருவமடைவதால் ஏற்படும் விளைவுகள்


  • பெண்கள் விரைவில் பருவமடைவதால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிறைய பாதிப்புகளை உண்டாக்குகிறது.
  • மனநிலை (Mood Swings), சம்மந்தமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, மாதவிடாய் கோளாறுகள் உண்டாகும்.
  • குறைந்த வயதில் பருவமடைவதால், அந்த பெண் குழந்தைகளின் எண்ணங்களில் பாலியல் உணர்வுகள் அதிகமாக தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.



குறைந்த வயதில் பருவமடைவதை தடுக்கும் முறைகள்


  • பெண் குழந்தைகளுக்கு சிறுவதிலேயே அதிக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
  • சோயா உணவுகளை தவிர்த்து, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு வகைகளை உண்ண வேண்டும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • மரபணு மாற்றப்பட்ட செயற்கை கலந்த பால் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
  • குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பில், செயற்கை சோப்பு கட்டிகளை தவிர்த்து, இயற்கையான சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

பிரட் போண்டா

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 2

முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் - 1 கிண்ணம்

(பொடியாக நறுக்கியது)

பச்சை பட்டாணி - 1 கிண்ணம்

தக்காளி - 2

பிரட் - 1

பாக்கெட் பால் - 1/4 லிட்டர்

கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - சிறிதளவு

கொத்துமல்லி - சிறிதளவு

 செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, கரம் மசாலா, மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, பின் மசித்த உருளைக்கிழங்கு, கொத்துமல்லி சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாலில் பிரட்டை நனைத்து, அதில் செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து நீளமாகவோ, உருண்டையாகவோ உங்கள் வசதிப்படி செய்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். மிகவும் ருசியாக இருக்கும்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

எச்சரிக்கை


குள்ளமாக இருப்பவர்கள் தங்களை சற்று உயரமாக காட்டுவதற்கு ஹை ஹீல்ஸ் பயன்பட்டது அந்தக் காலம். இன்றோ, நடன மங்கையோ, நாகரிக மங்கையோ ஹை ஹீல்ஸ் அணிந்து ஒய்யாரமாக உலா வருவதுதான் டிரெண்ட். நாகரிகத்தின் சின்னமாகிவிட்ட ஹை ஹீல்ஸ், கேட்வாக் மாடல்கள் தொடங்கி கல்லூரி மாணவிகள் வரை பிரபலமோ பிரபலம்! 
அழகுக்காகவும் ஸ்டைலுக்காகவும் பெண்கள் பயன்படுத்தும் இவ்வகை செருப்புகள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கால முதுகுவலி முதல் ஆளையே முடக்கிப் போடும் மூட்டுவலி வரை வருவதற்கு ஹீல்ஸ் காலணிகள் காரணமாக அமைகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். ஹை ஹீல்ஸ் உருவான வரலாற்றில் தொடங்கி, அதனால் ஏற்படும் பிரச்னைகள் வரை விவரிக்கிறார் எலும்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் கோபி மனோகர்...



‘‘ஹை ஹீல்ஸை முதன்முதலாக பயன்படுத்தியது ஆண்களே!




16ம் நூற்றாண்டில் பெர்சிய போர்வீரர்கள், குதிரையில் அமர்ந்தபடியே வில்லில் இருந்து அம்புகளை எய்துவதற்கு வசதியாக, குதிரையின் கடிவாளத்தில் ஹீல்ஸ் காலணிகளை பொருத்திக் கொண்டனர். ஐரோப்பிய நாடுகளை அவர்கள் பிடித்த போது அங்கும் மெல்ல பரவியது ஹை ஹீல்ஸ் வழக்கம். பிரான்ஸ் நாட்டின் ‘கேத்தரின் டே மெடிசி’ என்பவரே  முதன்முதலாக ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்மணி. அவர் பிரான்ஸ் அதிபரை மணந்து கொண்டார். அப்போது அவருக்கு 14 வயது தான். அதிபரின் உயரத்துக்கு நிகராக தன்னைக் காட்டிக்கொள்ள ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டார். அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் பணக்காரப் பெண்கள் பெருமைக்குரிய அடையாளமாக கருதி இதனைப் பயன்படுத்தினர். 
பின்னர், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஃபேஷன் ஷோக்களில் மாடல்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். ‘உலக அழகி’களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவிலும் பரவியது. உயரம் குறைவான நடிகைகள், கதாநாயகர்களின் உயரத்துக்கு ஏற்ப காட்டிக்கொள்ள ஹீல்ஸ் அணிய ஆரம்பித்தார்கள். இப்படித்தான் உலகெங்கிலும் ஹை ஹீல்ஸ் காலணிகளும் ஷூக்களும் பரவ ஆரம்பித்தன.  அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லும் போது ஹை ஹீல்ஸ் அணிந்து செல்லவேண்டும் என்பது விதி. விமானப் பணிப்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணியவேண்டும் என்பது அவர்களின் டிரெஸ் கோட்.‘‘நீண்ட காலமாக ஹை ஹீல்ஸ் பயன்படுத்தி வருபவர்களுக்கு பாதத்துக்கு மேல் உள்ள கரண்டைக்கால் தசைகள் பாதிப்படையும். ‘Calf Muscles’ என்று இதனை குறிப்பிடுவோம். இதில் இறுக்கம் உருவாகி வலி அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னைக்கு ‘அச்சிலஸ் டெண்டினைடிஸ்’ என்று பெயர். ‘ப்ளான்டர் ஃபேசியா’ எனப்படும் தசைநார்தான் கணுக்கால் எலும்பில் இருந்து கால்விரல்கள் வரை இருக்கிறது. இது ஹை ஹீல்ஸ் அணிவதால் தடிமனாகி பாதத்தில் வலி ஏற்பட காரணமாக அமைகிறது. 
ஹை ஹீல்ஸ் அணிந்தால் வேகமாக நடக்கவோ, ஓடவோ முடியாது. மெதுவாகத்தான் நடக்க முடியும். இதனால் மனரீதியாகவே சுறுசுறுப்பு பாதிக்கப்படும். விரல்களை மூடியபடி பாக்ஸ் போன்ற தோற்றத்தில் சில ஹை ஹீல்ஸ் காலணிகளை வடிவமைத்து இருப்பார்கள். இதைத் தொடர்ந்து அணிவதால் பெருவிரலில் அழுத்தம் அதிகமாகி ‘ஹெலஸ் வால்கஸ்’ என்னும் உறுப்புக் குறைபாட்டை உருவாக்கும். பெருவிரலானது மற்ற விரல்களை நோக்கி வளைந்து விடும். மற்ற விரல்களில் அழுத்தம் ஏற்பட்டால் ஹெம்மர் டோ, கிளா டோ, மல்லட் டோ போன்ற விரல் குறைபாடுகளை ஏற்படுத்தும். விரல்களில் வரும் பிரச்னைகளை அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்ய வேண்டியிருக்கும். அதனால், விரல்களில் ஏதேனும் வேறுபாடு தெரிந்தால் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திவிட வேண்டும். 




உயரமாகத் தோற்றமளிக்கச் செய்வதோடு, எடுப்பாகத் தெரியவும் செய்வதால், பெண்கள் அதிக அளவில் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகிறார்கள். ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது முதுகில் ஏற்படும் ஒருவித வளைவால் முன்பக்கமும் பின்பக்கமும் பெண்களுக்கு அழகாகத் தெரியும். இதனாலேயே நடிகைகள் அதிகமாக இதனை பயன்படுத்துகின்றனர்...’’ என ஹை ஹீல்ஸ் பிரபலமான விதம் கூறும் டாக்டர் கோபி மனோகர், அதன் பாதகமான விளைவுகள் குறித்தும் விளக்குகிறார்... 

பாதத்தில் உள்ள கால்கேனியல் எலும்பில் தேய்மானத்தை ஏற்படுத்தி ‘கான்கேனியல் ஸ்பர்’ என்னும்  பிரச்னை வரக் காரணமாகிறது. மேற்சொன்ன இரண்டு பிரச்னைகளிலும் அதிகாலையில்   படுக்கையை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும்.  கவனிக்காது விட்டாலோ, நாட்கள் செல்லச் செல்ல நாள் முழுவதும் வலி துன்பம் தரக் கூடும். 

ஹை ஹீல்ஸ் அணிவதால் நடையில் ஏற்படும் மாற்றத்தால் மூட்டுகளில் அதிக அழுத்தம் உருவாகி தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்னும் மூட்டு எலும்பு தேய்மான நோய் எளிதாக வருவதற்கு வழிவகுக்கிறது. ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். தண்டுவட எலும்புகளில் உள்ள அனுலார் சவ்வு கிழிபட்டு முதுகு வலி பிரச்னையை ஏற்படுத்தும். முதுகுப் பகுதியில் லம்பார் லார்டோசிஸ் வளைவை அதிகப்படுத்தி தண்டுவட எலும்புகளில் L5, S1 பகுதியில் அதிக தேய்மானம் ஏற்படுத்தி வலியை உருவாக்கவும் ஹை ஹீல்ஸ் முக்கிய காரணம்.சிலருக்கு Intervertebdral disc prolapse என்னும் தண்டுவட எலும்புகளின் நடுவே உள்ள தட்டுகள் தேய்மானம் அடைந்து முதுகுவலி ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் மருந்து, மாத்திரைகள், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளை கொடுத்து சரி செய்து விடலாம். பிரச்னை வளர்ந்த நிலையில் வலி குறையாமல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்யவேண்டியிருக்கும். இப்போது பதின்ம வயது பருவப்பெண்களும் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இப்பழக்கம் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சியை பாதித்து, இளம் வயதிலேயே கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் ஹை ஹீல்ஸ் தேவையா என்று இளம்பெண்கள் யோசிக்க வேண்டும்...’’ என்று எச்சரிக்கிறவர், ஹை ஹீல்ஸ் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார்


  1. பாதங்களில் வலி உள்ளவர்கள் கான்ட்ராஸ்ட் பாத் என்ற சிகிச்சையை வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளைகளும் செய்ய வேண்டும்.
  2. நீண்ட நாட்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து பழகியவர்களால் வழக்கமான செருப்புகளுக்கு உடனே மாற முடியாது. பாதங்களின் கீழ் உள்ள ஆர்ச் எனப்படும் வளைவுகள் மிகவும் குறைந்துவிடும். ஒரு இஞ்ச் அளவுள்ள ஹீல் உள்ள செருப்புகளுக்கு மாறி அதன் பிறகுதான் ஹீல் இல்லாத செருப்புகளுக்கு மாற வேண்டும்.
  3. எந்த வகை செருப்புகள் அல்லது ஷூக்கள் போடவேண்டும் என நிபுணர்களை கலந்தாலோசிப்பது பாதங்களுக்கு நலம் தரும்.
  4. அச்சிலஸ் டெண்டினைடிஸ், ப்ளான்டர் ஃபேசியா, கால்கேனியல் ஸ்பர் போன்ற பிரச்னைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை முறையில் அல்ட்ரா சவுண்ட் கொடுப்பதன் மூலம் வலியை சரி செய்யலாம். அப்படியும் வலி சரியாகவில்லை என்றால் லோக்கல் ஸ்டீராய்டு இன்ஜெக்ஷனை வலி உள்ள இடத்தில் மட்டும் போட்டு சரி செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

எலாஃப் தீர்ப்பு - ஒரு புதிய நம்பிக்கை




பாரபட்சம்!

தகுதி, திறமை, கடினமாக உழைக்கும் எண்ணம் எல்லாமே சிலரிடம் இருக்கும். ஆனால், பொருத்தமான வேலை கிடைக்காது. அப்படிப்பட்ட ஒருவர் சமந்தா எலாஃப். தலையில் கறுப்புநிற புர்கா அணிந்திருந்த காரணத்தினாலேயே எலாஃபுக்கு வேலை இல்லை என்று திருப்பி அனுப்பியது ஒரு கம்பெனி. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளம்பெண் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி, நீதியைப் பெற்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்!

2008ம் வருடம். 17 வயது இஸ்லாமிய பெண் எலாஃப் ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போகிறார். அது ‘மாடல்’ பணிக்கான நேர்முகம். நிறுவனமோ 1892லிருந்து செயல்பட்டு வரும் பழம்பெருமை வாய்ந்த ‘ஏபர்க்ராம்பி - ஃபிட்ச்’. குழந்தைகளுக்கான உடைகளைத் தயாரித்து விற்கும் பிரிவு அது. எலாஃப் தலையில் புர்கா அணிந்திருந்தார்.

அவருடைய அழகு, திறமை எல்லாமே ஈர்க்கும்படி இருந்தாலும், புர்கா உறுத்தலாக இருந்தது. நிறுவனத்தின் ‘டிரெஸ் கோட்’ உடன் அது ஒத்துப் போகவில்லை. அவருக்கு வேலை கொடுப்பதில்லை என முடிவு செய்தது ஏபர்க்ராம்பி நிறுவனம். சட்டத்தின் உதவியை நாடினார் எலாஃப். அவரது சார்பாக அமெரிக்காவின்,‘ஈக்வல் எம்ப்ளாய்மென்ட் ஆப்பர்சூனிட்டி கமிஷன்’ வழக்குத் தொடுத்தது. ‘மதரீதியான நம்பிக்கை, அடையாளத்துக்காக எலாஃப் தலையில் புர்கா அணிந்திருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று ஒரே போடாகப் போட்டது  ஏபர்க்ராம்பி நிறுவனம்.

விசாரணையின் போது எலாஃப் இப்படிக் குறிப்பிட்டார்... ‘‘நான் அமெரிக்காவில் பிறந்தேன். அமெரிக்காவில் உள்ள மற்றவர்களைப் போலத்தான் நானும் என்று நம்பினேன். ஏபர்க்ராம்பியில் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அது என் இரண்டாவது வீட்டைப் போல தோன்றியது. ஆனால், என் மத நம்பிக்கைக்காகவே  நான் அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்கிறேன்.’’  வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. விசாரித்த உச்ச நீதிமன்றம் எலாஃபுக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘வேலைக்குச் சேருவதற்காக விண்ணப்பம் செய்திருக்கும் எலாஃப், தன் மத அடையாளங்களைத் தெரிவிக்கும் உடையை அணிவதற்காக தனிப்பட்ட கோரிக்கை எதையும் நிறுவனத்திடம் தெரிவிக்கத் தேவை இல்லை. ஏபர்க்ராம்பியில் இருப்பவர்களுக்கு எலாஃப் ஓர் இஸ்லாமிய பெண் என்பதும் தன் மத அடையாளத்துக்காகவே அவர் புர்கா அணிந்திருக்கிறார் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்து வேலைக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமியர், சீக்கியர், யூதர் என பல்வேறு சிறுபான்மையின மக்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தாடி, தலைப்பாகை,  உடை போன்றவற்றை வைத்து ஒரு நபரை வேலைக்கு சேர்க்காமல் விடுவதும் ஒரு வகையில் பாரபட்சம் பார்ப்பதுதானே!

நன்றி : குங்குமம் தோழி